ஜூபிடர் நிலாவில் தண்ணீர் இருக்கு, கோவை மாணவர் ஆய்வு கட்டுரை நாசா விண்வெளி மையம் ஏற்பு
கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பி.இ ஏரோநாட்டிக்கல் இரண்டாம் ஆண்டு மாணவர் ரோகன்கணபதி (20). இவர் கடந்த ஜனவரியில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்த விண்வெளி ஆய்வு தொடர்பான கட்டுரை போட்டிக்கு ஆய்வுக் கட்டுரை சமர்பித்தார்.
உலக அளவில் 2 ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டு, 87 ஆய்வு கட்டுரைகள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து மாணவர் ரோகன் கணபதியின் ஆய்வு கட்டுரை மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர் ரோகன் கணபதி கூறியதாவது: உலக அளவில் விஞ்ஞானிகள் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் பங்கேற்பது வழக்கம். நாசா அறிவிப்பை அறிந்து, விண்வெளி ஆழ்பகுதி என்ற தலைப்பில் ஜூபிடர் கோளில் உள்ள நிலா குறித்து 9 பக்கத்தில் ஆராய்ச்சி கட்டுரை அனுப்பினேன். என் கட்டுரை தேர்வு பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை.
ஜூபிடரில் 32 நிலாக்கள் இருக்கின்றன. இதில் ‘யுரோப்பா‘ என்ற நிலா பெரியது. இங்கு சுத்தமான தண்ணீர் இருக்கிறது. வான்வெளியில் வேறு எந்த கோளிலும் இதுபோன்ற நல்ல தண்ணீர் கிடையாது.
தண்ணீர் இருந்தால் உயிரினங்கள், தாவர இனங்கள் வாழ முடியும். இது 3500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. பூமியில் இருந்து 170 கோடி கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மண், கல், பாறை கிடையாது. 10 கி.மீ ஆழத்துக்கு பனிக்கட்டி உறைந்து கிடக்கிறது.
அதற்கு கீழ் நல்ல தண்ணீர் உள்ளது. இந்த நீரை எடுத்து பயன்படுத்த முடியும். இங்கே ஆக்சிஜன் கிடையாது. யுரோப்பா நிலாவுக்கு எந்திர மனிதனை (ரோபோ) அனுப்பி அங்குள்ள தகவல்களை சேகரிக்கலாம்.
உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறதா என உறுதி செய்யலாம். இந்த ஆய்வு கட்டுரையை வரும் 21 முதல் 26ம் தேதி வரை வாஷிங்டன் நகரில் நடக்கும் ஆய்வுக் கட்டுரை கூட்டத்தில் சமர்பிக்கின்றேன். இவ்வாறு கணபதி கூறினார்.