ApsarA
Posts : 661 Join date : 2012-01-26 Location : ~~WonDerLanD~~
| Subject: ~~நாக்கின் நிலைதான் என் நிலையும்: ஜெயலலிதா ~~ Mon Jun 18, 2012 1:23 am | |
| எதிர்க்கட்சிகள் நான் தவறு செய்வேனா? என்று பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கின்றன. மத்திய அரசு உதவிகள் செய்ய மறுக்கிறது என்று கதை கூறி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் உள்துறை மானியக் கோரிக்கையின்போது தனது பதிலுரையில் இதுபற்றி கூறியதாவது:- இந்த மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சில உறுப்பினர்கள் அரசின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினார்கள். சில உறுப்பினர்கள் குறை சொல்வது தான் எங்கள் பணி என்ற அடிப்படையில், இந்த அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். மண்ணுக்கு மரம் காவல், மரத்திற்கு இலை காவல், பயிருக்கு வேலி காவல், உயிருக்கு உடல்காவல், கண்ணுக்கு இமை காவல், கடலுக்கு கரை காவல் என்பது போல காப்பது ஒன்றையே கடமை என செயல்படுவதுதான் காவல் துறை. அந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் சிலர் காவல் துறை எப்படி பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சில் கட்சி கண்ணோட்டம் இருந்தது. சிலர் பாராட்டு தெரிவித்தனர். உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. இதில் தலை சிறந்தது நாக்கு. சாமர்த்தியமாக, சாதுர்யமாக, திறமையாக செயல்படுவதில் நாக்குக்கு இணை எதுவும் இல்லை. வாயில் நாக்கை சுற்றி 32 பற்கள் உள்ளன. இது அந்த நாக்கை கடித்து குதறி கிழித்து விடும் கூர்மை பெற்றவை. ஆனாலும் இந்த சாமர்த்தியமான நாக்கு 32 பற்களுக்கு இடையே இருந்து திறமையாக, வெற்றிகரமாக காலம் தள்ளி வருகிறது. போர் வீரர்களுக்கு கூட போர் இல்லாத காலத்தில் ஓய்வு இருக்கும். ஆனால் மனித நாக்குக்கு ஓய்வே கிடையாது. அது பிறந்தது முதல் 32 பற்களுக்கு இடையே தினமும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்போடு பேசுகிறது. கட்டளையிடும் போது அதற்கேற்ற வகையில் பேசுகிறது. கனிவு காட்டும் போது தேன் சுவை சொற்களை சொல்கிறது. மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது. சுவை மிக்க உணவுகளையும் சுவைக்கிறது. இப்படி பல்வேறு கடமைகளையும் திறமையாக காலம் முழுவதும் நாக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த நாக்கு போலத்தான் என்னுடைய நிலைமையும் என் நிலைமையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். தமிழ்நாட்டிலுள்ள பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் அந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும், ஊடகங்களும் ஜெயலலிதா எப்போது தவறு செய்வார், எப்போது ஒரு பிழை செய்வார், எப்போது ஒரு தவறான செயலைச் செய்வார் என்று பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். டெல்லியிலோ மத்திய அரசு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்விட்டாரா? இனி தமிழ்நாட்டை வாழவிடக்கூடாது. ஜெயலலிதா விடுக்கும் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளைச் செய்துவிட்டால், இனி ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்துவிடுவார், வளர்ந்துவிடுவார். ஆகவே, மத்திய அரசிலிருந்து என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன? உடனே மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாகக் குறைத்துவிடு, நிதி உதவி வழங்காதே, கூடுதல் மின்சாரத்தை வழங்காதே; இப்படிப் பல உத்தரவுகள். தமிழகம் தலைநிமிர்ந்து விடக்கூடாது, எழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசு பல அடக்குமுறைகளை ஏவுகிறது. இத்தனைக்கும் மத்தியில், வெற்றிகரமாக ஆட்சியை நடத்திக்கொண்டு மண்ணெண்ணெய், மின்சாரம், நிதி உதவி ஆகியவை மத்திய அரசிடமிருந்து கிடைக்காவிட்டாலும், நம்மால் இயன்ற ஆதாரங்களை திரட்டிக்கொண்டு, வெற்றிகரமாக இந்த ஆட்சியை நடத்திக்கொண்டு பல சாதனைகளை சாதித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி என்னை சுற்றி மத்திய அரசும் சரி, இங்கே உள்ள எதிர்க்கட்சிகளும் சரி. எதிரிகளாகவே உலா வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக ஆட்சி செய்வதுடன் பல்வேறு சாதனைகளையும் நாம் செய்து கொண்டு வருகிறோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவற்றை மீறி தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வேதனைகளை சாதனைகளாக்கி இந்த ஆட்சியை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அதனால்தான் நான் என்னுடைய நிலையை நாக்குக்கு இணையாக கூறினேன். 'வாழ்க வசவாளர்கள்' என்று அண்ணா கூறியது போல இங்கு என்னை வசைப்பாடியவர்களுக்கும், இங்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. | |
|