AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: >> பூக்கள் சிந்தும் துப்பாக்கிகள் << Thu Sep 06, 2012 2:21 pm | |
| பூக்கள் சிந்தும் துப்பாக்கிகள் முன் க(வி)தைச் சுருக்கம்:
(தேசம் காக்க எல்லைக்குச் சென்றுவிடுகிறான் ஒரு இந்தியத் தாயின் புதல்வன்...
குண்டு மழைக்கு மத்தியிலும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
அவனது உயிரைத் தாங்கி நிற்கும் அவன் மனைவிக்கு அவன் பேனா
உயிர்த்துளிகள் பொழிந்து ஒரு ஜீவ கடிதம் எழுதுகிறது....)
இதயத்தில் இருப்பவளே...
இந்தக் கடிதத்தை நீ பிரிக்கும்போது
உன்னையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் உன் விழியோரம் எட்டிப்பார்க்கிறதே...
என் தோள் மட்டுமே சுமக்க வேண்டிய அந்த அழகியதுளியால் கடிதம் நனைத்துவிடாமல்
தொடர்ந்து படி...
இன்றோடு உன்னைப் பிரிந்து வந்து 240 நாட்கள் ஏழு மணி முப்பது நிமிடங்கள்
நான்கு வினாடிகள்
ஆகின்றன...
என் சொல்லநாய்க்குட்டியே...
எப்படி இருக்கிறாய் நீ...?
எப்படி இருக்கிறேன் உனக்குள் நான்?
எப்படி இருக்கிறோம் நாம்?
எப்படி இருக்கிறது நான் ரசிக்கும் உன் நெற்றிக் கவிதைத் தழும்பு?
எப்படி இருக்கிறது உன் ப்ரிய செவ்வந்திச் செடி....பூத்துச் சிரிக்கிறதா
இப்போது?
இதற்கு முந்தைய கடிதத்தில்....நான் நல்லா இருக்கேங்க....இப்போ அடிக்கடி அழுவதை
நிறுத்தி விட்டேன் என்று எழுதியிருந்தாய்...
ஏனடி அழகழகாய் பொய்கள் சொல்கிறாய்?
தினம் தினம் மெளனமாய் இரவில் நீ சிந்தும் கண்ணீரைத்தான்
இந்த வானம் கவர்ந்து வந்து அதிகாலை பனிமழையாய் என்னில்
பொழிகிறதே...
கண்மணீ...அழுவது உன் சுதந்திரம்...அதுவும் நீ உனக்காக அழவில்லை...
எனக்காக அழுகிறாய்..எங்கே நானும் எதிரிகளின் தோட்டாக்களுக்கு
இரையாகிப் போவேனோ எனப் பயப்படுகிறாய்...கவலை கொள்ளாதே
பூவே...எந்த துப்பாக்கி குண்டுக்கும் என் உயிர் எடுக்கும் வலிமையில்லை...
என் உயிரைத்தான் ஊர் விட்டு கிளம்பும் முன்பே உன் கண்களுக்குள்
பத்திரப் படுத்திக் கொண்டாயே நீ...
இந்த வெற்று உடலை அந்த முட்டாள்குண்டுகள் என்ன செய்துவிடமுடியும்??
உன்னுடன் நான் இருந்த அழகிய நாட்களின்
நினைவுகளில்தான் என் உள்ளம் சிலிர்த்துப் போகிறதடி...
உனக்கு நினைவிருக்கிறதா...உன்னை நான் பெண்பார்க்க வந்த நாள்...
எந்த வித அறிவிப்பும் இன்றி வந்துவிட்டோம் நாங்கள்....
உன் வீட்டுத் திண்ணையில் உன் பக்கத்து வீட்டு வாண்டுகளுடன்
பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தாய் நீ ஒரு நீல நிற
தாவணியில்...
ஒற்றைக் கையை தரையில் ஊன்றி
லேசாய் தலைசாய்த்து நீ பல்லாங்குழி விளையாடிய அற்புதத்தை
பார்த்தவுடன்
பதுங்கு குழியில் பழக்கப்பட்ட என் மனசு ஓடி வந்து உன் கன்னக்குழியில்
பதுங்கிக் கொண்டு என்னைப் பார்த்து சிரித்தது
"மாடிக்கிட்டியா மாட்டிக்கிட்டியா" என்று...
வந்திருப்பது உன்னைப் பார்பதற்குத்தான் என்பதை
தெரிந்து கொண்டவுடன் வீட்டிற்குள் ஓடிவிட்டாய்
நீ..
சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்தவுடன்...
உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்றேன் நான்...
உன் அப்பாவிடம்...
உன் வீட்டின் பின்புறமுள்ள சிறிய தோட்டத்தில்
நெல்லிமரத்தின் அடியில் முதுகு காட்டி நின்றிருந்தாய்
நீ அவசரமாய் உடுத்திய பட்டுப்புடவையுடன்...
என் காலடிச்சத்தம் கேட்டு மெதுவாய் திரும்பி
தலைகவிழ்ந்து நின்றாய்....
உங்ககிட்ட ஒண்ணு சொல்லனும்...என்றேன் நான்..
ம்...
என்னைப் பத்தி சொன்னாங்களா?
ம்...
என்ன சொன்னாங்க...?
மிலிட்ரில இருக்கீங்களாம்....
ஆமா...காஷ்மீர்ல இருக்கேன்...காஷ்மீர் பத்தி
தெரியும்ல?
ம்ம்...ரோஜா படத்துல பாத்திருக்கேன்....
அழவா சிரிக்கவா என்று தெரியவில்லை எனக்கு!
நீ பார்த்தது நிழல்...நான் நிஜத் துப்பாக்கிகளுடன் தூங்குபவன் என்று
சொல்ல நினைத்தேன்...சொல்லியிருந்தால் பயத்தில் என்னைக் கட்டிக்கொள்ள
சம்மதிக்க மாட்டாயோ என்கிற சுயநலத்தில் சொல்லாமல் சிரித்துச் சமாளித்துவிட்டு வந்துவிட்டேன்.
இப்போது அதற்காக அழுகிறேன் கண்ணே...
தனிமையின் கொடுமையைத் தானே உனக்கு நான் திருமணப் பரிசாக
தந்திருக்கிறேன்!
பிரிவுப் பூக்களைத் தானே நீ சூட தந்திருக்கிறேன்....
உன்னுடன் நானிருந்த இரண்டு மாதம் இரு நொடிகளாய்
கரைந்து போனதே...
கவலை கொள்ளாதே என் பிரிய சகி...
சீக்கிரம் வருகிறேன் உன் பூமுகம் பார்க்க...
உன்னுடன் நானிருந்த எத்தனை எத்தனை
நேச நிமிஷங்களை நான் இழக்கிறேன் தெரியுமா?
தீபாவளிப் பட்டாசுகளுக்கு நீ காது பொத்தி என் முதுகுக்கு
பின் ஒளிந்து கொள்வாயே....அந்த ஒளி நிமிடம்...
நீ சாமி கும்பிடும் போது நானும் சாமிகும்பிடுகிறேனா
என்று பார்க்க ஒரு கண்திறந்து பார்ப்பாயே யாருக்கும்
தெரியாமல் ....அந்த ஒற்றைப்பார்வை நிமிடம்...
ஒரு நாள் எனக்கு முன்பு எழுந்து நான் தூங்குகிறேன் எண்றெண்ணி
கண்ணாடி முன் என்னைப் போல் பாவனை செய்து
கண்ணாடியை வெட்கப்பட வைத்துக் கொண்டிருந்தாய்
நீ...
என் கைத்தட்டல் சத்தம் கேட்டவுடன்....நான்
பார்த்து விட்டதையுணர்ந்து அன்று முழுவதும்
வித விதமாய் வெட்கப்பட்டாயே....அந்த வெட்க நிமிடம்...
இப்படி ஒற்றை நிமிட நினைவுகளில்தான் கழிகிறது
என் ஒவ்வோர் இரவும்...
எவ்வளவுதான் நான் உடைந்து விடாமல்
இருக்கப் பழகினாலும்....
என்னை வழியனுப்ப ரயில் நிலையம் வந்த நீ
யாருக்கும் தெரியாமல் உன் உதடுகள் துடிதுடிக்க
என்னிடம் "பத்திரமா திரும்பி வந்துருங்க"
என்றாயே....
அந்த நேசவார்தைகளின் ஒலி இன்னும்
எனக்குள் அப்படியே ஒலித்துக்கொண்டிருக்கிது கண்மணீ...
துப்பாக்கி சுமந்தவன் அன்றுதான் உன்
நேசத்தின் சுமை தாங்காமல் கண்கலங்கினேன்...
பள்ளியின் கடைசி மணி அடித்ததும் வீடு
நோக்கி ஓடும் குழந்தையாய் உன்னிடம்
ஓடி வர தவிக்கிறது இந்த மனசு....
இந்த மாத இறுதியில் வருகிறேன் புனிதமானவளே...
இதைப் படித்த சந்தோஷத்தில் உன் விழிகள்
சிந்தப்போகும் கண்ணீரையும் சேமித்துவை....
துப்பாக்கி சுமந்த என் தோள்களுக்கு உன்
கண்ணீர்ப்பூக்கள் சுமக்கும் வேளை வந்துவிட்டது...
நாட்களை வேகமாய் நகரச் சொல்லி
நச்சரிக்கும்,
உன் ப்ரிய கணவன். | |
|