Posts : 661 Join date : 2012-01-26 Location : ~~WonDerLanD~~
Subject: ~~நீயாகவே பூக்கும்!!~~ Thu Apr 26, 2012 2:18 am
அப்பா சொல்லுடா என்றேன் சொன்னாய், அம்மா சொல்லுடா என்றேன் சொன்னாய், அண்ணா சொல்லுடா என்றேன் சொன்னாய், போடா சொல்லு என்றேன் போடா என்றாய், பொறுக்கி சொல் என்றேன் நீயுமென்னைப் பொறுக்கி என்றாய் எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை எனக்கும் புரியவைத்த - ஞானமடா நீயெனக்கு!! சிறகடிக்கும் பறவைக் குஞ்சு போல் எனைக்கண்டதும் அப்பே அப்பே என்று தாவித் தாவி பறப்பாய் நீ வயிற்றில் சுமந்த பட்டாம்பூச்சி பற்றி எனக்குத் தெரியவில்லை என்றாலும் மனதெல்லாம் உனை எண்ணி - ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் சந்தோசமாய் பறக்கும்!! எப்படியோ உனக்கு என் மடி சொர்க்கபுரியாய் சொக்குகிறதோ; மடியில் படுத்ததும் தூங்கிப் போவாய் நான் உன் முகம் பார்த்தவாறே தலை தடவித் தடவி விடுவேன் தூக்கம் உனக்கு பரிசான அந்த கணமெல்லாம் - வாழ்க்கை எனக்கும் வசமாகும்! எதை மென்றாலும் நாக்கு தட்டி கேட்பாய் நானும் மென்றதை எல்லாம் நைய மென்று உனக்கு எச்சிலோடு தருவேன் நீ ஆர்வத்தோடு தின்கையில் தின்றது உனக்கு இனித்ததோ அல்லது எச்சில் இனித்ததோ என்று பூரிப்பில் முகமெல்லாம் பூத்துப் போவேன் நீ மீண்டும் நாக்கு தட்டி தட்டி வருவாய் உன்னை போல் இன்னும் நான்கு குழந்தைகள் பிறந்தாலென்ன என்று மனதார எண்ணிக் கொள்வேன்!! சிலநேரம் உன் அழுக்கு ஆடை கழற்றி நுகர்ந்துப் பார்ப்பேன் நுகர்ந்து நுகர்ந்து உன் வாசத்தை எல்லாம் உயிர் முழுக்க சேமிப்பேன் உனை விட்டு பிரிந்திருக்கும் சிலநேரம் உன் வாசத்தில் உயிரெல்லாம் மணக்கும் நினைவுகள் உள்ளிருந்து உன் நினைவாய் எனக்குள் நீயாகவே பூக்கும்!!