RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar

 

 Tamil Story - கூண்டுக்கு வெளியே...

Go down 
AuthorMessage
Friendz




Posts : 177
Join date : 2013-06-27

Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Empty
PostSubject: Tamil Story - கூண்டுக்கு வெளியே...    Tamil Story - கூண்டுக்கு வெளியே...   Icon_minitimeFri Aug 30, 2013 10:13 pm

.



Tamil Story - கூண்டுக்கு வெளியே...




ஏதோ ஒரு நடுக்காட்டில் ரயில் சிக்னலுக்காக காத்திருந்தது. பயணங்களில் தூங்கும் பழக்கம் தேவாவிற்கு இருக்கவில்லை. ஜன்னலின் கண்ணாடி வழியே, வெளியே தெரியும் வெளிச்சப் புள்ளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். எதிர் இருக்கையில் அம்மாவின் அருகே படுத்திருந்த குழந்தை ஒன்று ஏ.சி.யின் குளிர் தாங்காமல் நெளிந்து கொண்டிருந்தது. அப்பர் பெர்த்தில் இருந்து அதைப் பார்த்த அப்பா எழுந்து வந்து, போர்வையால் குழந்தையை மூடினார். மனைவியின் அருகில் அமர்ந்து பாதி வெளிச்சத்தில் மனைவியையும், குழந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த அப்பாவை தேவாவிற்கு மிகவும் பிடித்துப் போனது. ரயில் ஏறியதில் இருந்தே அவரை கவனித்துக் கொண்டிருக்கிறாள். மிகவும் அன்பான, அக்கறையான மனிதராய் இருந்தார் அவர். இரவு குழந்தைக்கு உணவு ஊட்டும்போது, இடையிடையே மனைவிக்கும் ஊட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் சுற்றியிருப்போரை கூச்சத்துடன் பார்த்தது. அவரின் அன்பு அதையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. குழந்தையை கழிவறைக்கு அழைத்துச் சென்றது, படுக்கையை விரித்தது, கதை சொல்லி தூங்க வைத்தது என எல்லாம் அவர்தான் செய்து கொண்டிருந்தார். இடையிடையே சக பயணிகளிடம் வேறு சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தார்.

ரயிலில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, தேவா ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். "என்னம்மா, நீ சாப்பிடாம இருக்கே, வந்து சாப்பிடு".

"இல்லைங்க, இருக்கட்டும்.. என்கிட்ட பழம், பிஸ்கட் இருக்கு"

"பழமும், பிஸ்கெட்டும் ஒரு சாப்பாடா, இட்லி சாப்பிடு" என்றவர், தேவாவின் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி விட்டு இட்லி இருந்த பிளேட்டை திணித்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, "யார் குடுத்தாலும் வாங்கிச் சாப்பிடறதா, மயக்க மருந்து எதாவது கலந்திருந்தா என்ன செய்வ?" என்று கிண்டலடித்தார். "குழந்தைகளை நேசிக்கிற ஒரு அப்பா, அதெல்லாம் செய்வார்னு நான் நம்பலை" என்று தேவா பதில் சொன்னபோது, அந்தப் பெண்ணின் முகம் ஒருநொடி பிரகாசித்து அடங்கியது. அவள் தேவாவை ஸ்நேகத்தோடு பார்த்தாள். படுத்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்து அவர் குழந்தைக்கு கதை சொன்னபோது, அவரின் மனைவியும் "உம்" சொல்லிக் கொண்டிருந்தாள். தேவாவும் மனசுக்குள் ‘உம்’ சொல்லிக் கொண்டாள்.

"என்னம்மா மணி இரண்டாகுது, நீ இன்னமும் தூங்கலையா?"

"இல்லங்க, தூக்கம் வரலை"

"உனக்கும் வேணும்னா ஒரு கதை சொல்லவா?" அவர் இயல்பாகத்தான் கேட்டார்.

"ஒரு கதையில் எல்லாம் தூங்க மாட்டேன் நான், பரவாயில்லையா?" அவர் சிரித்தபடியே எதிரே வந்து அமர்ந்தார். அதிகாலை நான்கு மணி வரை அவளோடு பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு அந்தப் பெண்ணோடு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது என்பதும், அந்தக் குழந்தை அந்தப் பெண்ணின் முதல் கணவனின் குழந்தை என்பதும் தேவாவிற்கு ஆச்சரியமாக இருந்தது..

அப்பா என்கிற ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் இருக்க முடியாது. உலகில் ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு ரகம். தேவாவை பொறுத்தவரை அப்பா என்றால் கம்பீரம் என்றே அர்த்தம். அவளது அப்பா அப்படி இல்லாதது கூட காரணமாக இருக்கலாம். அப்பாவின் தோள் சாய்ந்து ஆறுதல் தேடுபவர்கள் உண்மையில் பாக்கியம் செய்தவர்கள் என்பது இப்போதும் அவள் எண்ணம்.

சிறுவயதில் அப்பாவை விட வேகமாக நடப்பதும், அவரை விட உயரமாக வளர்வதும் தான் அவளது லட்சியமாக இருந்தது. வளர, வளர அவளது அப்பா பற்றிய எண்ணங்களும், கற்பனைகளும் வேறாய் இருந்தன. அவளது எண்ணங்கள் வளர்ந்த அளவுக்கு அப்பா வளரவில்லை; அவர் அப்படியே இருந்தார். ஆறாவது படிக்கும் போது அப்பாவை விட வேகமாக அவளால் நடக்க முடிந்தது. இன்னும் ஆறு வருடத்தில் அவர் உயரத்தையும் கடந்து விட முடியும் என உணர்ந்தபோது அப்பா அவளை வெகுவாக ஏமாற்றி இருந்தார்.

குட்டிச்சாத்தானும், பனைமரத்தில் சுண்ணாம்பு கேட்ட இசக்கியின் கதையும் அப்பா தேவாவிற்கு நிறையமுறை சொல்லியிருக்கிறார். சிறுவயதில் அந்த கதைகள் அவளை திகிலடைய வைத்ததுண்டு. தலையில்லாத குட்டிச்சாத்தான் வீட்டின் பின்புறம் வழியாக ஒருநாள் வரும் என்று பால்யத்தில் அவள் உறுதியாய் நம்பியதுண்டு. அப்படி வர வாய்ப்பில்லை என்று தெரிந்த ஒருநாளில் அப்பாவின் கதைசொல்லி பாத்திரத்தின் மீதும் ஈர்ப்பில்லாமல் போனது. அப்பா அப்போதும் குட்டிச்சாத்தானை நம்பிக் கொண்டிருந்தார்.

தேவாவின் விருப்பங்களும், அப்பாவின் விருப்பங்களும் முரண்பட ஆரம்பித்தன. அவருக்கு வீடே உலகம். வீட்டைத் தாண்டிய உலகத்தை தேவா பார்க்க விரும்பியபோது அவர் அனுமதிக்க மறுத்தார். பள்ளி தாண்டி கல்லூரிக்கு சென்றபோது, அவர் இன்னமும் கடுமையானார். வீட்டில் இருந்து கல்லூரிக்கு இரண்டரை மணி நேரப் பயணம். விடுதியில் சேர்க்கப் பயந்து, தினமும் வீட்டிற்கும், கல்லூரிக்குமாய் ஐந்து மணிநேரம் அலைய வைத்தபோது, அப்பாவை பிடிக்காமலே போனது.

நாலு மணிக்கு கல்லூரியில் இருந்து கிளம்பினால் ஏழு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் தாமதமானால் பேருந்து நிலையத்தில் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருப்பார். டயர் பழுதாகி பேருந்து நடுவழியில் நின்றபோது, நெடுநேரமாய் பேருந்து வராத ஒருநாளில், மழையால் பேருந்து தாமதமானபோது என தான் சம்பந்தப்படாத எல்லா தாமதத்திற்கும் அப்பா கோபம் கொண்டபோது, அந்த அப்பாவை விட்டு தொலைந்து எங்காவது போனால் போதும் என்றிருந்தது தேவாவிற்கு.

தூங்கும் நேரம் தவிர எல்லா நேரத்திலும் வாழ்க்கை பற்றிய பயம் அப்பாவை ஆக்கிரமித்திருந்தது. வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்ளும் துணிவு அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. தன் எல்லா பயத்தையும் குழந்தைகள் மேல் திணித்துக் கொண்டிருந்தார். தேவாவிற்கு நினைவு தெரிந்து அவள் வீடு மகிழ்ச்சியாய் இருந்ததில்லை. தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பிரச்னை என்றால் அதை அங்கேயே சமாளிக்க அப்பாவிற்குத் தெரியாது. வீட்டில் மணிக்கணக்காய் அந்த பிரச்னை குறித்து பேச்சு நடக்கும். அந்தப் பேச்சும் ஒருநாளும் தீர்வை நோக்கிச் சென்றதில்லை. பிரச்னையை சுற்றியே, எதிர்மாறாய் பேசிக் கொண்டிருப்பார். இறுதியில் சாப்பிடாமல் மொட்டைமாடியில் போய் அமர்ந்திருப்பார். தேவா போய் அவரை சாப்பிட வரச்சொல்லி கெஞ்சுவாள். அவரது பதில் அவளை மூர்க்கத்தனமாய் தாக்கும். இழவு நடந்த வீடுபோல் அனைவரும் சாப்பிடாமல் தூங்குவார்கள். தேவா தன்னுடைய சிறுவயதை நினைத்தால் பெரும்பாலும் இதுபோன்ற எண்ணங்களே கசப்பாய் மூளை முழுவதும் நிறைந்திருக்கின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் ஆறுதலாய், தேவாவிற்கு ஒரு நண்பன் கிடைத்தான். திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இருவரும் பேருந்து நிலையத்தில் சந்திப்பார்கள். ஒருமணி நேரத்தில் அவன் இறங்க வேண்டிய இடம் வரும். அவன் இறங்கிய பிறகும், அவளது பயணம் ஒருமணி நேரம் தொடரும். வீட்டிற்கும், கல்லூரிக்கும் பயணத்திலேயே நேரம் சென்று கொண்டிருந்ததில், நூலகத்தில் இருந்து அவன் தான் புத்தகங்கள் எடுத்துத் தருவான். அவன் தான் வண்ணதாசனை அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.

அப்பாவின் மேலிருந்த கோபம், வண்ணதாசனின் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. வண்ணதாசன் தனக்கு அப்பாவாக இல்லாமல் போனதை தேவாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மழை பெய்யும் ஒருநாளில், ஆற்றங்கரையில் குடையில்லாமல் வண்ணதாசனோடு நடந்து போக வேண்டும், குளக்கரையில் துள்ளும் தவளையை காண்பித்து அவர் அவளுக்கு கதை சொல்வார். இந்த நினைப்பே தேவாவிற்கு கண்ணீரை வரவழைத்தது.

அந்த நண்பனை வீட்டிற்கு அழைத்திருந்தாள். இதுவரை அவளது நண்பர்கள் என்று யாரும் வீட்டிற்கு வந்தது கிடையாது. அவளுக்கு நண்பர்கள் இருப்பார்கள் என்றும் வீட்டில் யாருக்கும் தெரியாது. பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு பதினைந்து நிமிட நடைதூரம் தான். ஒருநாள் வரும் வழியில், "என்னம்மா, இப்பத்தான் காலேஜ்ல இருந்து வர்றியா?" எனக்கேட்ட பக்கத்து வீட்டு அண்ணாவிற்கு, "ஆமாண்ணா" என்று பதில் சொல்லி விட்டு நிமிர்ந்தபோது அப்பா பின்னால் நின்றிருந்தார். அந்த ஒற்றை வார்த்தை பதிலுக்கு வீட்டில் ஒருமணிநேரம் அழுது அவள் தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியதுமே தெரிந்த ஆண்கள் யாரும் எதிரில் வந்துவிடக் கூடாதே என்று ஒவ்வொரு நாளும் தேவாவிற்கு படபடப்பாய் இருக்கும்.

நான் உங்க வீட்டிற்கு வரலாமா? என்று நண்பன் கேட்டதும் அவளால் மறுக்க முடியவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனை தேவா வீட்டிற்கு வரச் சொன்னாள். முந்தின நாள் இரவு தூக்கமே வரவில்லை. அவன் காலை பத்து மணிக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தான். அவன் வரப்போவதை வீட்டில் சொல்லும் தைரியம் கூட இருக்கவில்லை. முதல்முறையாக ஒரு நண்பன் வருவதால் அவனை வீட்டில் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ என பயமாய் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் அவனது உறவினர்கள் யாராவது இறந்து போய் அவன் வராமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் தேவாவுக்கு தோன்றியது.

அவளது துரதிருஷ்டம் சரியாக பத்தேகால் மணிக்கு அவன் வீட்டின் முன்வந்து நின்றான். "உள்ள வா" அவளது வரவேற்பு அவளுக்கே கேட்கவில்லை. பயத்தில் உடலில் சகலமும் நடுங்கியது.

"அம்மா, இது என் ஃபிரண்ட், திருநெல்வேலி இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறான். வள்ளியூரில் தான் வீடு"

"ம். வாப்பா.." இவ்வளவு கடுமையான ஒரு வரவேற்பை அவன் வாழ்க்கையில் அதற்குப் பின்னும் கேட்கக் கூடாது.

"எங்க தேவா, உன்னோட அக்காவும், தங்கச்சியும்.." அவர்கள் அவன் குரலைக் கேட்டவுடனே அறைக்குள் ஒளிந்து கொண்டார்கள். எத்தனை அழைத்தும் வெளியே வந்து அவனை சந்திக்க மறுத்தார்கள். தேவாவுக்கு அவமானமாக இருந்தது. "அவங்க உன்னைப் பார்க்க கூச்சப்படுறாங்க" சொல்லும்போதே அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது. "பரவாயில்ல, நான் அவங்களை உள்ளே வந்து பார்க்கிறேன்." அவன் எழுந்ததும், அம்மா சமையலறைக்குள் இருந்து தேவாவை கடுமையாக முறைத்தாள்.

"அய்யோ, வேண்டாம். அவங்க ரொம்ப கூச்சம். நீ போறதுக்குள்ள அவங்க வெளியே வருவாங்க." அவனுக்கு வீட்டில் அசாதாரண சூழ்நிலை எதையோ புரிய வைத்திருக்க வேண்டும். அமைதியாய் அமர்ந்தான். அவனுக்கான டீயை எடுக்க சமையலறைக்குள் நுழைந்த நேரத்தில் அம்மா நறுக்கென்று தேவாவை கிள்ளி வைத்தாள்.

"என்ன இது புதுப்பழக்கம், அப்பா வந்தா என்ன நடக்கும் தெரியுமா?"

அவள் வலியையும், கண்ணீரையும் மறைத்து டீயை அவன் முன் வைத்து எதிரில் அமர்ந்தாள். அவனை நேருக்கு நேராய் பார்க்க அவமானமாய் இருந்தது. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த நேரம், அப்பா வீட்டிற்குள் நுழைந்தார். தேவா அவனை அறிமுகப்படுத்தியதும், அவனருகில் அமர்ந்து சகஜமாக பேச ஆரம்பித்தார். அவரின் எல்லாக் கேள்விகளும், தேவாவிற்கும் அவனுக்குமான பழக்கத்தை அறிந்து கொள்வதன் பொருட்டே கேட்கப்பட்டது. அவன் கிளம்ப எத்தனித்த போது, "சாப்பிட்டுட்டு தான் போகணும்" என உட்கார வைத்தார்.

அப்பாவே அவனருகில் அமர்ந்து பரிமாறினார். மூன்றாவது கவளம் சோறு அவன் வாயில் இருக்கும்போது, "எனக்கு மூணு பொண் குழந்தைங்க, அக்கம் பக்கத்தில் என் பிள்ளைங்களைப் பத்திக் கேட்டா தங்கம்னு சொல்வாங்க. இந்த தேவா மட்டும்தான் அப்பப்ப எனக்கு நெஞ்சு வலி வரவைக்குறா. இனி இந்த மாதிரி வீட்டுக்கெல்லாம் வராதப்பா. பஸ்ஸில் பார்த்து பேசற பழக்கமும் வேண்டாம். வேற ஊர்ல படிச்சாலும் பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற காலேஜ்னு சொல்லித்தான் அவளை அங்கே சேர்த்தேன். நீ வேற எங்கியோ ஒரு காலேஜ்ல படிக்கிற. உனக்கு அவக்கிட்ட பாடம் பத்தி கூட பேச வேண்டியிருக்காது.." அவர் சொல்லிக் கொண்டே போனார்.

தேவாவிற்கு அவள் பொருட்டு, அவள் நண்பன் அவமானப்படுவதைப் பார்க்க சகிக்கவில்லை. அடுத்த நான்காவது நிமிடம் அவன் விடைபெற்று கிளம்பினான். அவனை வாசல்வரை வழியனுப்ப வரமுயன்ற தேவாவை அம்மாவின் ஒரு உறுமல் ஒலி அடக்கியது. அவன் கிளம்பிய சில நிமிடங்களில் அடுத்த தெருவில் வசிக்கும் அம்மாவின் தோழி கடைக்கு செல்வதற்காக வீட்டைக் கடந்தவள், ஒரு நிமிடம் நின்று "தேவாவைத் தேடி ஒரு பையன் வந்தானே, சரியா வீட்டைக் கண்டுபிடிச்சு வந்தானா?" எனக் கேட்டுச் சென்றாள்.

அந்த விநாடியில் அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்தது. எனக்கு ஏதோ பண்ணுது என கட்டிலில் படுத்தார். "அய்யோ, என் பொண்ணைத் தேடி ஒரு பையன் வந்ததை அவ ஊர் முழுக்க சொல்லியிருப்பா, நாளைக்கு நான் மூணு பொண்ணுங்களுக்கும் எப்படி கல்யாணம் பண்ணி வைப்பேன்" என அரற்றத் துவங்கினார். மொத்தமாக எல்லோரும் பயந்து போய் அழுததில் எதிர் வீட்டில் ஒருவர் வேடிக்கை பார்க்க வெளியே வந்தார். தேவாவை ஓங்கி அறைந்த அம்மா, மொத்தமாக எல்லாரையும் அடக்கினாள். அப்பாவின் நெஞ்சுவலி அடங்க அரைமணி நேரம் ஆனது.

அதன் பின்னான வீட்டின் அறிவுரைகளும், வசவுகளும், ஓங்கி விழுந்த அறையும் அவளை எதுவும் செய்யவில்லை. இருந்த ஒரே நண்பனை இழந்த துக்கம் மனம் முழுக்க படிந்திருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரிக்கு செல்ல வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. கெஞ்சல்கள், மன்னிப்புக் கோரல் என இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு மூன்றாவது நாள்தான் தேவா கல்லூரிக்கு சென்றாள்.

மாலையில், திரும்பும் வழியில் வழக்கம்போல் நண்பன் காத்துக் கொண்டிருந்தான். இனி பேசவே மாட்டான் என நினைத்தபோது, சிரித்தபடி அருகில் வந்தான். "உனக்காகத் தான் வாங்கினேன்" என நான்கைந்து புத்தகங்களை கொடுத்து வழக்கம்போல் பேசிக் கொண்டே வந்தான். இறங்குவதற்கு முன், "உன் வீட்டை விட்டு எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியேறிடு" என்று சொல்லிப் போனான். அவன் சொன்னது போலவே தேவாவின் ஒரே லட்சியமும் அவளது ஊரை விட்டு வெளியேறுவதாய் தான் இருந்தது.

முதுகலை படிக்கும்போது ஒரு நேர்காணலுக்காக சென்னை செல்ல வேண்டியிருந்தது. தேவாவோடு அப்பாவும் வந்திருந்தார். ஹோட்டல் ஒன்றின் ஏழாவது மாடியில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அப்பா ஒரு சேரில் அமர்ந்து நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் அவர் பங்குக்கு நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார். அது புதிதாக தொடங்கவுள்ள ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திப் பிரிவுக்கான நேர்காணல். "இங்கே வந்திருக்கிற மத்த பொண்ணுங்களை போல நான் என் பொண்ணை வளர்க்கலை, சாயங்காலம் ஆறு மணியானா வேலையில இருந்து வீட்டுக்கு அனுப்பிடணும். எனக்கு இந்த மாதிரி வேலையே பிடிக்கிறதில்லை. இவதான் ஒத்தக்கால்ல நிண்ணு கூட்டிட்டு வந்தா. இந்த வேலை கிடைக்கலைன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.." இப்படியாக நீண்டது அப்பாவின் நேர்காணல்.

அதன்பிறகு அவர்கள் தேவாவை பார்த்த பார்வையில் ஏளனம் இருந்தது. ஆனாலும் அந்த வேலை கிடைத்து விட்டது. இவ்வளவு தூரத்தில், இப்படி அலையுற ஒரு வேலைக்கு போகணுமா, ஒண்ணும் வேண்டாம் என வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்தமுறை தேவா கேட்பதாய் இல்லை. கிளம்பியே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருந்தாள். அழுகை, கெஞ்சல், பட்டினி என அஹிம்சைப் போராட்டங்கள் எதுவும் பயன்தராத நிலையில் அவள் கடைசியாய் கெரசின் கேனை கையில் எடுத்தாள். என்னை வேலைக்கு அனுப்பலைன்னா நான் செத்துப் போறேன் என்கிற மிரட்டல் பலன் தந்தது.

சென்னை விடுதி அறையில் தூங்கிய முதல்நாள் தேவாவிற்கு மிதப்பது போல் இருந்தது. சுதந்திரத்தின் அவசியம் அடைபட்டவர்களுக்கே புரியும். தினமும் வீட்டிற்கு ஃபோன் பேசும்போது அவர்கள் சொல்லும் அறிவுரைகள் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தன. வந்த இரண்டே மாதங்களில் நிறைய நண்பர்கள் வேறு. தன்னை யாரும் கண்காணித்துக் கொண்டிருக்கவில்லை என்கிற நினைப்பே அவளுக்கு பெரும் ஆசுவாசமாக இருந்தது.

அதிலும் அலுவலகத்தில் பணிபுரியும் சதீஷ் ரொம்பவே நெருக்கமாக பழகினார். சென்னை புதிது என்பதால் அவளுக்கு எல்லா உதவிகளையும் அவர் செய்தார். நிறைய படிப்பவர் என்பதும் நிறைய விஷயங்கள் தெரிந்தவர் என்பதும் தேவாவிற்கு அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியிருந்தது. அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் சென்னை முகவரியையும் சதீஷ் தான் தேவாவிற்கு கொடுத்தார்.

மனித உறவுகள் குறித்து அக்குவேறு, ஆணிவேறாய் அலசுபவர் அந்த எழுத்தாளர். இவ்வளவு நுட்பமாகவும், உளவியலோடும் மனித மனங்களை அலச முடியுமா என்று தேவாவிற்கு ஆச்சர்யமாய் இருக்கும். அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பது ஊரில் இருக்கும்போதே அவளது ஆசைகளில் ஒன்று.

சென்னை வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் நேரம் கிடைத்தது. ஃபோன் செய்து கேட்டபோது, உடனே வரச்சொன்னார் அவர். தேவா குறித்து நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார். காலை பத்து மணிக்கு ஆரம்பித்து ஒருமணி வரை பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சு பெரும்பாலும் ஆன்மீகம் சார்ந்ததாகவே இருந்தது. தேவாவிற்கு ஆன்மீகத்தில் எல்லாம் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆனால் மனதிற்கு பிடித்த எழுத்தாளர் பேசும்போது பிடிக்காத விஷயம் கூட கேட்கும்படியாகத்தான் இருந்தது. ஆனாலும் பதில் சொல்ல விரும்பாமல், வெறுமனே ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தாள்.

மதிய உணவிற்குப் பின் அவர் பேச்சு உடல் சார்ந்து திரும்பியது. உடல் என்பது ஒன்றுமே இல்லை என்றார். அந்த ஒன்றுமில்லாத விஷயத்தை பற்றி ஒன்றரை மணிநேரம் பேச வேறு செய்தார். தேவாவிற்கு கொஞ்சம் குழப்பம் தோன்ற ஆரம்பித்தது. அவள் இடையிடையே புகுந்து, பேச்சை அவர் கதைகளையும், கதாபாத்திரங்களையும் பார்த்து திருப்பினாள். அவர் வெகு சாமர்த்தியமாக அந்த கதாபாத்திரங்களின் உடல் இச்சைகள் குறித்து பேச்சை திசை மாற்றினார்.

வீட்டில் அவர் மனைவி வேறு இருந்ததால், அவரை சந்தேகிக்கவும் முடியவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே, எழுந்து போகவும் தயக்கமாக இருந்தது. தேவா அசவுகரியமாக உணர்ந்ததை அவர் கவனித்திருக்கக் கூடும். அவளை உள் அறைக்கு அழைத்துச் சென்றார். கதவை தாளிடாமல் வெறுமனே சாத்தினார். அவளுக்கு எதிராக நின்று கொண்டார். தேவாவிற்கு படபடப்பு இன்னமும் அதிகமானது. ஆனாலும் அப்பாவை விட ஐந்து வயது அதிகமான ஒருவரிடம் இவ்வளவு தூரம் பயப்படுவது தேவையற்றதோ எனவும் தோன்றியது.

"ஏன் கண்ணம்மா, இவ்வளவு படபடப்பாவும், அலைபாயிற மனதோடவும் இருக்கே.. அமைதியா இருக்கணும். கண்ணை மூடு நான் உனக்கு ஒரு சிம்பிளான யோகா சொல்லித் தரேன்"

"நான் இன்னொரு நாள் வரேன், எனக்கு ஹாஸ்டல் போகணும். வேலை இருக்கு"

"நான் யாரோடவும் இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறதில்லை. எனக்கும் எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா, உன்னைப் பார்த்தப்ப நீ நல்லாயிருக்கணும்னு தோணிச்சு. என் குழந்தை அமைதியில்லாம இருக்கறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு" அவர் கைகள் அவள் முகத்தை வருடி, கீழிறங்கியது.

"படபடப்பில் உடம்பு எப்படி ஆடுது பாரு.. இதை ஈஸியா சரி பண்ணிடலாம்"

"ச்சீ" தேவா அவர் கைகளை தள்ளி விட்டு கதவைத் திறந்து வெளியேறினாள். விடுதிக்குச் செல்ல பிடிக்கவில்லை. நேராக சாந்தோம் தேவாலயத்திற்குப் பின்புறம் கடற்கரைக்கு சென்று உச்சி வெயிலில் சுடும் மணலில் பேசாமல் அமர்ந்திருந்தாள். மனம் முழுக்க கசப்பாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. தான் நம்பிய ஒருவரின் இயல்பு இப்படி இருக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை. அவர் அவளை வெகுவாக ஏமாற்றி இருந்தார். பார்க்க நேரமில்லை என்று சொல்லி சந்திப்பை மறுத்திருந்தாலோ, நான் பெரியவன் ஒரு சின்னப் பெண்ணிடம் என்ன பேச்சு என்று அவர் அலட்டி இருந்தாலோ கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவர் எழுத்துக்கு அந்த வேடங்கள் பொருத்தமாகக் கூட இருந்திருக்கலாம். இவ்வளவு நாள் வராத குழப்பமும், அவநம்பிக்கையும் முதன்முதலாக மனதில் தோன்றியது. வீட்டின் நினைவு வந்தது. அப்பாவின் பயத்திற்கான காரணம் கொஞ்சம் புரிவது போல் இருந்தது.

அந்த குழப்பம் வீட்டை நோக்கித் தள்ளி விடுமோ என்று யோசித்தபோது, கொஞ்சம் தெளிவு வந்தது போல் இருந்தது. அமைதியாக கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தேவா பிறந்த ஊரில், வளர்ந்த ஊரில் என எல்லா இடங்களிலும் அவளுக்கு வெகு அருகில் கடல் இருந்தது. சென்னையிலும் நினைத்த நேரத்தில் கடல் பார்க்கலாம் என்கிற நினைப்பே அவள் தனிமையை வெகுவாகப் போக்கியிருந்தது. எல்லாத் துன்பங்களையும் ‘ஹா’ வென கைகீட்டி வாங்கி கரைத்து விடும் தன்மை கடலுக்கு மட்டுமே உண்டு.

அவள் அங்கே வந்து வெகுநேரம் ஆகியிருந்தது. திரும்பிப் பார்த்தபோது, லுங்கி கட்டிய ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டு பின்னால் நின்றிருந்தான். எவ்வளவு நேரமாய் நிற்கிறானோ, தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு நிற்கிறானோ என யோசித்த விநாடியில் அங்கிருந்து எழுந்து, ஆட்டோ பிடித்து விடுதிக்கு சென்றாள். அவரின் புத்தகங்கள் சிலது சூட்கேஸில் இருந்தன. அதை எடுத்து ஜன்னல் வழியாக எலக்ட்ரிக் ட்ரெயினை வேடிக்கை பார்த்தவாறே கிழித்து எறிந்தாள். காகிதங்களை கிழிக்க இவ்வளவு பலம் தேவையில்லை என்றாலும், கோபத்தை வெளியேற்ற அந்த வேகம் தேவையாய் இருந்தது.

இரண்டு வாரங்கள் கழித்து, சதீஷோடு அவர் நண்பனை பார்க்கச் சென்றிருந்தாள். அவர் எதேச்சையாய் எழுத்தாளரைப் பற்றிக் கேட்க, நடந்ததை அப்படியே கூறினாள் தேவா. "ஏன் இப்படி இருக்காங்க, சதீஷ்?"

"எப்படி இருக்காங்க. நீ கொஞ்சம் அதிகமா எமோஷனாகிறே தேவா. உனக்கு உடம்பு பொத்தி வைக்கிற விஷயமா இருக்கு. நீ நிறைய மாறணும். உன்னை மாதிரி வீட்டை விட்டு வெளியே வர்ற பொண்ணுங்க கல்ச்சர், பண்பாடு எல்லாத்தையும் விட்டுட்டு வரணும். எல்லாத்துக்கும் ரெடியா இருந்தா மட்டும் தான் இங்க நாம நிக்க முடியும்"

"எல்லாத்துக்கும்னா?"

"என்னோட பைக்குல வர்றே, இதோ என்னோட ஃப்ரண்டை பார்க்க வர்றே, என்னோட நிறைய பேசற, என்னை உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். நான் உனக்கு யாரு தேவா?"

"இதென்ன கேள்வி, நீங்க என்னோட ஃபிரண்ட்"

"அந்த ரைட்டருக்கு உன்மேல ஏதாவது ஈர்ப்பு தோணியிருக்கலாம். யு நோ தேவா, எனக்குக் கூட உன்மேல் அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கு, ஆனா சொன்னா, இந்த பட்டிக்காடு கோச்சுக்குமேன்னு அமைதியா இருக்கேன்" சதீஷ் சிரித்தார்.

"சதீஷ் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி" தேவா குழப்பமாகவும், பலகீமனாகவும் பதில் சொன்னாள்.

"ஸோ, வாட்.. அதுக்கும் நாம பேசிட்டிருக்கிற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் தேவா, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்கவே இல்லையே. நீ நிறைய விஷயத்தில் ரொம்ப ப்ராடா திங்க் பண்றே, பல நேரங்களில் இரண்டு நூற்றாண்டு பின்னாடி போய் பேசறே. உன்கிட்ட ஓப்பனாவே சொல்றேன் தேவா ஐ வாண்ட் யூ."

தேவாவிற்கு தலை சுற்றியது. "நான் உங்களை எவ்வளவு நம்பினேன் தெரியுமா? நல்லவர்னு நினைச்சேன்"

சதீஷ் பெரிய ஜோக் கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்தார். "இப்பவும் நான் நல்லவன் தான் தேவா. ஐ வாண்ட் யூ"

தேவா எழுந்தாள். அவளுக்கு உடனடியாக அப்பாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அப்பாவை நினைத்த விநாடி கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை சொல்லி விட்டு, மறுநாள் மாலை ஊருக்கு ஒரு ட்ரெயின் டிக்கெட் எடுத்தாள். கிளம்பும் வழியில் தான் இப்படி ஒரு அழகான கதை சொல்லும் அப்பாவை சந்திக்க நேரிட்டது.

இப்போது குழந்தை பக்கத்தில் அப்பா படுத்திருக்க, அந்தப் பெண் முகம் கழுவி விட்டு அவளருகில் வந்து அமர்ந்தாள். ட்ரெயின் திருநெல்வேலியைத் தாண்டி கன்னியாகுமரி பார்த்து சென்று கொண்டிருந்தது. நாகர்கோயிலில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளப் போவதாக அந்தப் பெண் சொன்னாள். தூக்கத்தில் இருந்து எழுந்த அவர் "நீ எழுந்தாச்சா, என்னை எழுப்பியிருக்கலாமே, காப்பி எதுவும் குடிச்சியா... இந்தப் பிள்ளை ராத்திரி முழுக்க தூங்காம முழிச்சிட்டு இருந்தது. நான் கூட உன்னைப் பத்தி கதை சொல்லிட்டிருந்தேன்?" என இரவில் விட்ட இடத்தில் இருந்து உரையாடலை தொடர்ந்தார். அவரின் குரல் கேட்ட விநாடியில் அந்த இடத்திற்கே ஒரு புத்துணர்வு வந்தது போல் இருந்தது.

தேவாவிற்கும், அந்தப் பெண்ணிற்கும் காஃபி வாங்கிக் கொடுத்தார். காஃபி ஒரே கசப்பு என அந்தப் பெண் சொன்னதும், "வாழ்க்கை மாதிரி தான் காப்பியும். கசப்பு இல்லாட்டி எப்படித்தான் இனிப்பை தெரிஞ்சிக்கிறது" என்று சிரித்தார். தேவாவிற்கு அந்த பதம் மிகப் பிடித்திருந்தது. "கசப்பு இல்லாவிடில் எப்படித்தான் இனிப்பைத் தெரிந்து கொள்வது?" இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது.

நாகர்கோயில் ரயில் நிலையத்தில் தேவா அந்தக் குடும்பத்திடம் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் பரிமாறி விடைபெற்றாள். தேவாவை அழைத்துப் போக அப்பா ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பாவிடம் அந்த மனிதர், "நல்ல தங்கமான பொண்ணுங்க" என்று சொல்லி சிரித்தார். அப்பா பெருமிதத்தோடு தேவாவைப் பார்த்தார்.

ஆட்டோ ஏறியதும், தேவா அப்பாவின் கரம் பிடித்து தோளில் சாய்ந்தாள். வளர்ந்த பெண் அப்படி செய்வது அவருக்கு கூச்சத்தை கொடுத்திருக்க வேண்டும் என்பது அவர் நெளிந்ததில் தெரிந்தது. "நீ இல்லாம வீடு நல்லாவே இல்லடா, எப்பவும் பேசிட்டே இருப்பியா, இப்ப பேச ஆளே இல்லாம, வீடு ஏதோ போல இருக்கு. உனக்கு எங்கயும் தனியாப் போகக் கூடத் தெரியாதே, இது தனியா என்ன பண்ணும் அங்கன்னு பதறுது" அப்பா கண்கலங்கினார்.

உலகின் மிக பாதுகாப்பான இடத்தில் இருப்பது போல் உணர்ந்தாள் தேவா. முதல்முறையாக தேவாவிற்கு அப்பாவைப் பிடித்திருந்தது.






Back to top Go down
 
Tamil Story - கூண்டுக்கு வெளியே...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Tamil story - (a+b)2 = a2+b2+2ab
» Tamil Story - வசை
» Tamil Story - ஒத்தப்பனமரக்காடு
» Tamil Story - வசந்தி
» Tamil Story - அதே பழைய கதி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: SHORT STORIES-
Jump to: