இறைவா! எனக்கின்னும் பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை மறையா திங்கு வைத்துத் தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ் சிறையால் தமிழ்மாந்தர் படுந்துயர் அறியாயோ? - அட இறைவா! எனக்குயிர் தந்தால் சிறை உடையாதோ? நோயால் எனையுருக்கி எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த வாயால் ஓய்விலாது குருதி வரவும் செய்தாய்! - உன்றன் சேயாம் தமிழ்க்குலத்தின் துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று காயாய் இருக்கையிலே வீழ்ந்து கருகவைப்பாயோ? உன்னை வணங்கி நின்ற பாரதியின் பின்னொருவன்- நின்தாள் தன்னை வணங்குகின்றேன் அவனைப்போல் பாதியிலே - பாவி என்னையும் நீ பறித்தால் தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன் அன்னை வீழ்ந்து துடிப்பாள் நீ என்னை அழைக்கலாமோ? உயிரை நீட்டி என்னை முன்போல் உலவ விடுவாய்!- சூழும் துயிலை நீக்கி வைப்பாய்! புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா வயிரநெஞ்சில் ஒன்றும் மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக் குயிலை வாழ வைப்பாய்! தமிழ் கூவவேண்டும் ஐயா!